August 03, 1990
தமிழர் - முஸ்லிம் உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கசந்துவரத் தொடங்கிய காலம் அது. இருபது நாட்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன். காத்தான்குடியைச் சேர்ந்த 200 க்கும் அதிகமான சகோதரர்கள் குருக்கள்மடப்பகுதியில் வியாபாரப்பொருட்களுடன் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்கள். அன்றிலிருந்து ஒரு அச்சமான சூழல் எம்மூரைத் தொற்றிக் கொண்டிருந்தது. நான்கு நாளைக்கு முன்னமே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அன்றைக்கெல்லாம் நாட்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படுவது ஒரு மோசமான அறிகுறி. புலிகளின் தாக்குதல்கள் எப்போதும் மின்சாரத் துண்டிப்பின் பின்னரே நிகழும். ஏதோவொரு அநியாயம் நிகழப்போவது பற்றி நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். இரவில் தூங்காமல் விழித்திருப்போம். ஆனால் ஆட்கள் நடமாடும் இஷா தொழுகை நேரத்தில் இவ்வாறான கோரச் சம்பவம் ஒன்று நிகழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
சலாஹுத்தீன் ஹாபிசும் நானும் முதலாம் வகுப்புத் தோழர்கள். முதலாம் குறிச்சிப் பள்ளியில் 7:25 வரை இருந்துவிட்டு டீ குடிக்க வீட்டுக்குப் போகிறேன் என்று சலாஹுத்தீனிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன். சலாஹுத்தீன் இஷா வரைக்கும் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார். வீட்டில் வாப்பா மக்ரிப் தொழுது கொண்டிருப்பது தெரிந்தது. டீ குடித்து விட்டு மீண்டும் பள்ளிக்கு புறப்பட்டேன். அந்த இடைவெளியில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கற்களைக் கொட்டுவது போன்று ஒரு வித சத்தம் கேட்டது. சிறிது இடைவெளி விட்டு மீண்டும் கற்களைக் கொட்டுவது போல் மற்றுமொரு சத்தம். துப்பாக்கிச் சத்தம் என்ற எண்ணம் அப்போது வரவில்லை. பள்ளியின் உள்ளே நடந்ததால் எதிரொலியில் அவ்வாறு கேட்டிருக்கக்கூடும்.
பள்ளியின் அருகே இருந்த சில்லறைக்கடைக்காரர் மற்றும் ஹவுழில் வுழு செய்து கொண்டிருந்த அனைவரையும் பள்ளியின் உள்ளே செல்லுமாறு புலிகள் பணித்தனர். ஏதோ பிழையாக நடக்கப்போவதை உணர்ந்த அவர்கள் பின்வாங்கும்போது "ஒன்றுமில்லை உங்களோடு கொஞ்சம் கதைக்கவேண்டியிருக்கிறது. இன்றைக்கு மீட்டிங் உள்ளே செல்லுங்கள்" என்று அதட்டினார்கள். சிலர் சிறிய கதவுகளால் வெளியேறி வீடுகளுக்கு ஓடிச்சென்று தப்பித்தார்கள். இரண்டாவது ரக்அத் தொடங்கியிருந்தது.பின்னால் நடக்கும் உரையாடல்கள் ஆயுத தயார்படுத்தல்கள் எல்லாம் தொழுது கொண்டிருந்தவர்களுக்கு தெளிவாகக் கேட்டன. அவர்களின் மொழிநடையில் வைத்து அவர்கள் நம் ஆட்கள் இல்லை என்பதை தொழுதவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மூன்றாம் ரக்அத்தின் சுஜூதில் தான் அந்தக் கொடூரம் நிகழ்ந்தது. முதலில் ஹவுழ் பகுதியில் ஒரு வெடி வைக்கப்பட்டது. அந்த அடையாளம் நம் பள்ளியில் இருப்பதை இப்போதும் பார்க்கலாம். அதன்பின்னர் ஒவ்வொரு கதவுகளிலும் நின்ற இரண்டு அல்லது மூன்று பேரால் ஒரே நேரத்தில் துப்பாக்கிகள் சுடப்பட்டன. சுஜூதில் இருந்த தொழுகையாளிகள் கனரக ஆயுதங்களால் சுட்டுச் சல்லடையாக்கப்பட்டார்கள். ஒரு இடைவெளி விட்டு எழும்பி ஓட எத்தனித்தவர்கள் மீது மீண்டும் துப்பாக்கி ரவைகள் பாய்ந்தன. ஓரிரு நிமிடங்களுக்குள் இந்தக் காட்டேரித்தனம் நடந்து முடிந்தது. இந்தத் தாக்குதலில் காயங்கள் எதுவுமில்லாமல் தப்பித்தவர்கள் பதினைந்து பேர் இருக்கும். சுட்டவர்களில் சிலரை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர்.
ஒருவாறு பள்ளிக்குள்தான் தாக்குதல் நடாத்தப்படுகிறது என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது. அந்தப் பகுதிப் பெண்களோ என்ன செய்வதென்று தெரியாது வீடுகளில் இருந்து வெளியேறி மெத்தைப் பள்ளிப்பக்கமாக ஓடி வந்து விட்டார்கள். பள்ளி முழுவதும் இரத்தத்தால் நிரம்பியிருந்தது. நடக்கும்போது சூடான இரத்தம் கால்களில் பட்டு ஒட்டியிழுத்தது. ஸ்தலத்திலேயே மரணமானவர்கள் 32 பேர் என நினைக்கிறேன். மற்றவர்களை கைத்தாங்கலாக மக்கள் மெத்தைப் பள்ளிக்கு கொண்டு சேர்த்தனர். வாப்பா பள்ளிக்கு வரவில்லை. நாநா ஊரில் இல்லை என்று என் மனம் சொல்லிக் கொண்டது. ஆனால் நடந்ததோ வேறு. நான் பள்ளிக்குச் செல்வதை அவதானித்த வாப்பா என் பின்னாலேயே வந்து பள்ளியில் தொழுதுகொண்டிருந்திருக்கிறார். வாப்பாவிற்கு கைக்குள்ளால் ஒரு வெடில்பட்டு இருந்தது. ஜனாசாக்களுக்கு இடையில் என்னைத் தேடியிருக்கிறார். பின்னர் சாச்சியின் பத்து வயதும் நிரம்பாத மகனை தூக்கிக்கொண்டு வீடு சென்றிருக்கிறார்.
மெத்தைப் பள்ளியை அடையும்போது காயம்பட்டவர்கள் ஒவ்வொருவராக மரணிக்கத் தொடங்கியிருந்தார்கள். பெரிதான மருத்துவ வசதிகள், தொலைத்தொடர்புகள் இல்லாத காலம் அது. டொக்டர் கலீல் போன்றவர்கள் முதலுதவிகளைச் செய்துகொண்டிருந்தார்கள். என்னோடு இருந்த கச்சிமுஹம்மது ஹாஜியார் ஓடிச்சென்று கொழும்புக்கு அழைத்து ஹிஸ்புல்லாவுக்கு தகவலை சொல்லியிருந்தார். அவரின் வீட்டில் அப்போது லேன்ட்லைன் இருந்தது. ஹிஸ்புல்லா எம்பி யாக தெரிவுசெய்யப்பட்டிருந்த காலம் அது. ஹிஸ்புல்லா படையினருக்கு அறிவித்து பின்னர் படையினர் ஒரு பத்து மணியளவில் அம்பியுலன்ஸ்களுடன் வந்து சேர்ந்தனர். காயம்பட்டவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். என்ன காரணமோ தெரியவில்லை. மட்டக்களப்பு வைத்தியசாலையில் தேவையானளவு மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறவில்லை. மீண்டும் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் படையினரின் ஹெலிகொப்டர்கள் மூலம் வெலிகந்தை, பொலநறுவை அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். விடிய விடிய ஹெலிகொப்டர்கள் பறந்தவண்ணமே இருந்தன. அன்றைய விமானப்படையினரின் அர்ப்பணிப்பு மறக்கமுடியாதது. ஆனாலும் தாமதமான மருத்துவ உதவிகளினால் இரத்தம் வெளியேறி நிறையப்பேர் மெளத்தாகிவிட்டார்கள்.
பள்ளியில் மரணமடைந்த சகோதரர்களை அடையாளம் காண்பதற்காக பெயர்களை எழுதி வைத்தோம். அடையாளம் காணவும் எழுதவும் நானே நின்றேன். ஒரு ஜனாசாவைத் தவிர மற்ற அனைவரையும் இனம்கண்டு கொண்டேன். பள்ளிக்கு வருபவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்களே. எனது தம்பியின் பெயரை மட்டும் எழுதாமல் விட்டு விட்டீர்களே என்று ஒருவர் கேட்டார். யார் தம்பி என கேட்ட நான் அதிர்ந்து நின்றேன். அது என் நண்பன் ஸலாஹுத்தீன். முகத்தில் குண்டுபட்டு அவனது முகத்தை என்னால் அடையாளம் காண முடியாமற் போய்விட்டது. எனது குடும்பத்தில் சுமார் பத்து பேர் அன்று ஷஹீதாகி இருந்தார்கள்.
பெரிதான அரசியல் அறிவோ இப்போது இருப்பது போன்று மார்க்க அறிவோ அன்று இருக்கவில்லை. ஆனால் மக்களிடையே ஆழ்ந்த ஒற்றுமை இருந்தது. காத்தான்குடி மக்களின் ஒற்றுமையை கடைசியாக நான் கண்டது அன்றுதான். ஜனாசாக்களுக்கான கடமைகளில் அன்றைய தப்லீக் சகோதரர்கள் மும்முரமாக செய்தார்கள். அவ்வளவு பணிகளும் ஒரு ஹேன்ட் ஸ்பீக்கர் மூலம் ஆதம்லெப்பை ஹசரத்தால் வழிநடாத்தப்பட்டது. யாரும் குறுக்காக ஒரு வார்த்தை பேசவில்லை. கபனுக்குத் தேவையான வெள்ளைத் துணிகள் காத்தான்குடி வர்த்தகர்களால் கொண்டு வந்து கொட்டப்பட்டது. நூற்றுக்கணக்கான மஞ்சிகளே தேவைப்பட்ட நிலையில் ஐநூறுக்குத் தேவையான பலகைகள் கொண்டுவந்து அடுக்கப்பட்டன. காயம்பட்டவர்களுக்கு குடிக்கக் கொடுக்க குரும்பைகள் தேவைப்படுவதாக அறிவித்தனர். பின்னர் பார்த்தபோது குடித்ததும் குடியாததுமாக இரண்டு லொறியளவிற்கு குரும்பைகளை கொண்டுவந்து சேர்த்திருந்தனர் எமது மக்கள். எஞ்சிய கபன் துணிகளை எமது வர்த்தகர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. பின்னர் ஏறாவூரில் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடூரத்தில் ஷஹீதான எமது ஏறாவூர் சகோதரர்களுக்காக அந்த கபன் துணிகள் அனுப்பிவைக்கப்பட்டன.
ஊரே நின்று தொழுத ஜனாசாத் தொழுகையையில் ஆதம்லெப்பை ஹசரத் கேட்ட துஆ இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. "இறைவா! தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உன்னிடம் உதவி தேடுமாறு நீ சொல்லியிருக்கிறாய். நாங்கள் அநியாயம் இழைக்கப்பட்டவர்கள். இந்த அநியாயத்து எதிராக திருப்பி எதுவும் செய்ய நாங்கள் சக்தியற்றவர்கள். இவர்களின் ஆணவமே இவர்களின் ஒற்றுமையிலேயே இருக்கிறது. அந்த ஒற்றுமையினாலேயே இவர்கள் இவ்வளவு அநியாயத்தையும் எம்மீது இழைக்கிறார்கள். யாஅல்லாஹ்! இவர்களின் ஒற்றமையை உடைத்துவிடு. இவர்களின் ஒற்றுமையை உடைத்து இவர்களுக்கு அழிவை ஏற்படுத்து!". மழை. மழை பெய்து தீர்த்தது. கோடை காலத்தில் யாரும் எதிர்பாராத ஒரு அடைமழை அது.
அந்த நேரத்தில் நான் இளைஞனாக இருந்தேன். அந்த துஆ எனக்கு விளங்கவில்லை. இந்த மனிதன் பாரிய அழிவை இவர்கள்மீது இறைவனிடம் வேண்டாமல் ஒற்றுமையை உடைக்கும்படி கேட்கிறாரே என்று.
பாயில் ஜனாசாக்காகளை கிடத்தி தூக்கிச் சென்றோம். மழையில் நனைந்த மையத்துக்களில் இருந்து இரத்தம் வழிந்து எமது வீதிகளை நனைத்தது. கிட்டத்தட்ட ஒரு பகல் கடந்து தூக்கின்றோம். அப்போது பட்ட காயம் போல் ஜனாசாக்களில் இருந்து இரத்தம் சொட்டி நனைத்தது. அனைத்து ஜனாசாக்களும் ஒரே கப்ரில் இட்டு அடக்கம் செய்யப்பட்டன.
காலங்கள் உருண்டோடி ஏதோவொரு நாளில்...
கருணா பிரிகிறாரா இல்லையா என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருந்தது. புலிகளில் பிளவாம். அது பெரும் வதந்தியாக இருக்கும், அல்லது அவர்களது இன்னுமொரு தந்திரமாக இருக்கும் என அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். வீடு வந்து சேரும்போது வாப்பா பிபிசி கேட்டுக் கொண்டிருக்கிறார். அன்றைய பேட்டியில் கருணா உத்தியோகபூர்வமாக தான் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிவதாகவும் இனிமேல் கிழக்கு தனியாக இயங்கும் எனவும் சொல்லிக்கொண்டிருந்தார்.
வாப்பா கேட்டார். "இன்றைக்கு என்ன நாள் தெரியுமா?".
"இஸ்லாமிய பிறைக் கலண்டர்படி நமது பள்ளியில் சுட்ட நாள்!"
-பைசல் நாநா
Comments
Post a Comment